logo

ஈரான் மீது தாக்குதல்: அமெரிக்காவுக்கு செளதி அரேபியா கண்டனம்!

ஈரான் மீது தாக்குதல்: அமெரிக்காவுக்கு செளதி அரேபியா கண்டனம்!

ஈரானின் அணுசக்தி உற்பத்தி தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு செளதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தாக்குதலுக்கு எதிராகவும், மத்திய கிழக்கு நாடுகளில் உருவாகியுள்ள பதற்றத்தைத் தணிக்கும் வகையிலும் உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து செளதி அரேபியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
''செளதி அரேபியாவின் சகோதர நாடான ஈரானின் சமீபத்திய நிலையை கவனித்து வருகிறோம். ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் கவலை அளிக்கிறது'' எனப் பதிவிடப்பட்டுள்ளது.

இதோடு மட்டுமின்றி, ''பதற்றத்தைத் தவிர்க்கவும், கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்கவும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இத்தகைய தீவிரமான சூழலைத் தணிக்கும் நோக்கத்தில், அரசியல் ரீதியில் தீர்வு காணவும், போரைத் தவிர்க்கவும் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்'' எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஈரான் மீது சனிக்கிழமை இரவு சக்தி வாய்ந்த பி -2 பாம்பர்ஸ் விமானங்கள் மூலம் மூன்று இடங்களில் அமெரிக்கா குண்டுகளை வீசித் தாக்குதல் மேற்கொண்டது. ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் ஆகிய மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
ஈரான் - இஸ்ரேல் இடையே கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துவந்த அமெரிக்கா, நேற்று இரவு ஈரானின் அணு உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா தொடங்கிய போரை ஈரான் முடித்துவைக்கும் என ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.

பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மரும் அமைதியை வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் அமெரிக்காவை விமர்சித்த ஈரானின் நட்பு நாடான ஓமன், இந்த போரை பெரிது படுத்த வேண்டாம் என அமெரிக்காவிடம் கேட்டுக்கொண்டார்.

ஒருபுறம் இஸ்ரேல், ஹமாஸ் போர் காரணமாக பாலஸ்தீனத்தில் தீப்பற்றி எரிகிறது. மறுபுறம் இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக மத்திய கிழக்கிலும் போர் பதற்ற நீடிக்கிறது. இதனால் 3-ஆம் உலகப் போர் தொடங்குவதற்கான நாட்கள் வெகு தொலைவில் இல்லை என சர்வதேச அரசியல் நிபுணர்கள் கணிக்கின்றனர்.

0
0 views