இந்தியாவுக்கு எதிராக சீனா, பாக்., உடன் கூட்டணியா: இல்லை என்று கூறி சமாளிக்கிறது வங்கதேசம்
இந்தியாவுக்கு எதிரான நோக்கத்துடன் எந்த சந்திப்பையும் நடத்தவில்லை என்று சீனா மற்றும் பாகிஸ்தானுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து வங்கதேசம் விளக்கம் அளித்துள்ளது. சீனாவின் குன்மிங்கில் சீனா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளின் பிரதிநிதிகள் கடந்த ஜூன் 19ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த 3 அண்டை நாடுகளுடனும் இந்தியாவுக்கு முரண்பாடு இருந்து வருகிறது. இந்த சூழலில், இந்த சந்திப்பு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை குறித்து வங்கதேச இடைக்கால அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் தவுஹித் ஹொசைன் கூறுகையில், ' சீனா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இடையே நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை அரசியல் தொடர்பானது அல்ல. அதிகாரிகள் அளவிலானது மட்டுமே. இந்த சந்திப்பில் கூட்டணி வைப்பதற்கான எந்த சாத்தியக்கூறுகளும் இல்லை. நாங்கள் யாருடனும் எந்த கூட்டணியும் அமைக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நோக்கத்தில் இந்த சந்திப்பு நடக்கவில்லை என்பதை உறுதியளிக்கிறேன் என்று கூறினார்.