
கம்பத்தில் நள்ளிரவில் அதிமுக கொடிமேடை இடிப்பு.
கட்சியினர் புகார்
தேனி மாவட்டம் கம்பத்தில் போக்குவரத்து சிக்னல் அருகே இருந்த அதிமுக கொடிக்கம்ப மேடை நள்ளிரவில் இடித்து அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் கட்சியினர் புகார் அளித்துள்ளனர். நள்ளிரவில் கொடிக்கம்பத்தை இடித்து அகற்றிய இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் நகரில் மையப் பகுதியாக உள்ளது போக்குவரத்து சிக்னல் பகுதி. இந்தப் பகுதியில் கடந்த 35 ஆண்டுகளாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடி கம்பம் வைக்கப்பட்டு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்த நாட்கள் மற்றும் கட்சியின் முக்கிய நாட்களில் பல்வேறு தலைவர்கள் கொண்டு கொடிகள் ஏற்றும் நிகழ்வு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் உள்ள அனைத்துக் கட்சிகள், சமுதாய அமைப்புகளின் நிரந்தர கொடிக் கம்பங்களை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அடுத்து
கட்சி கொடி கம்பங்கள் அனைத்தும் அகற்றப்பட்டன.
கம்பம் சிக்னல் பகுதியில் இருந்த அதிமுக கட்சி கொடி கம்பம் அகற்றப்பட்டது. ஆனால் அந்த கொடிக்கம்ப மேடை மட்டும் இருந்து வந்தது.
நேற்று இரவு, யாரோ மர்ம நபர்கள் ஜேசிபி வைத்து அந்த குடிக்கம்பு மேடையை இடித்து தள்ளி உள்ளனர். இது குறித்த தகவல் அறிந்து இன்று காலை சிக்னல் அருகே அதிமுக வடக்கு நகர செயலாளர் கார்த்திகேயன், தெற்கு நகர செயலாளர் கணபதி, ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் கட்சியினர் ஒன்று கூடினர்.
பின்னர் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில், கட்சி கொடிக்கம்பத்தின் மேடை இடித்து அகற்றப்பட்டது குறித்து, பல ஆண்டுகளாக இருந்த கட்சி கொடிக்கம்ப மேடையை தனி நபர் ஒருவர் சுய லாபத்திற்காக இரவு நேரத்தில் இடித்து அகற்றியுள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். மேலும் அதே இடத்தில் கட்சி கொடி கம்ப மேடை அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தினர்.
இது குறித்து உத்தமபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் சம்மந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவை வைத்து போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்சியினர் கூறுகையில், இச்சம்பவத்தில் உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் தங்களது போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் என்று தெரிவித்துச் சென்றனர்.
இச்சம்பவத்தால் கம்பதில் பரபரப்பு ஏற்பட்டது.