கம்பத்தில் முன்னாள் மாணவர்கள் சார்பில் ரமலான் சமத்துவ நல்லிணக்க விழா: உலக அமைதி மற்றும் விவசாயம் செழிக்க வேண்டி சிறப்புப் பிரார்த்தனை
ரமலான் புனித மாதத்தை முன்னிட்டு, கம்பம் முத்தையாபிள்ளை நினைவு உயர்நிலைப் பள்ளியில் (அரசு உதவிபெறும் பள்ளி) 1998-99 ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பில் 'சமத்துவ நல்லிணக்க இப்தார் விழா' கம்பம் பாரதிய இலக்கிய பேரவையில் நடைபெற்றது. இதில் சாதி, மத பேதங்களைக் கடந்து மனிதநேயத்தைப் போற்றும் வகையில் உலகில் நிலவும் போர்ச் சூழல்கள் நீங்கி அமைதி நிலவவும், போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும் வேண்டி கூட்டுப் பிரார்த்தனை செய்யப்பட்டது. மேலும் உலகத்தில் வாழும் அனைத்து உயிரினங்களும் நோய் நொடிகள் இன்றி நலம் பெற வேண்டும் என்றும், இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் . நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயம் செழிக்கவும், போதிய மழை பெய்து நிலம் குளிரவும் , மக்களிடையே சாதி, மத வேறுபாடுகள் மறைந்து, சகோதரத்துவமும் ஒற்றுமையும் மேலோங்க வேண்டும் என சிறப்பு பிராத்தனை மேற்கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக, நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் விதமாக முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கொருவர் பரிசுகளை வழங்கி மகிழ்ந்தனர். மதங்களைக் கடந்து நண்பர்களாக ஒன்றிணைந்த இந்த நிகழ்வு, அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.