|
|
|
சட்டமன்றத் தேர்தல் 2026: தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவு தமிழகத்தில் அமலுக்கு வரும் விதிமுறைகள்!
சட்டமன்றத் தேர்தல் 2026: தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவு தமிழகத்தில் அமலுக்கு வரும் விதிமுறைகள்!
சட்டமன்றத் தேர்தல் 2026: தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவு தமிழகத்தில் அமலுக்கு வரும் விதிமுறைகள்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை (ஏப்.21) மாலை 6 மணியோடு முடிவடைகிறது. அதன்பிறகு, தமிழகத்தில் அமலுக்கு வரும் தேர்தல் விதிமுறைகள் அடங்கிய பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் தற்போதைய 16-வது சட்டசபையின் பதவிக்காலம் மே 10-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்று 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. மே 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 295 கம்பெனி துணை ராணுவப் படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும், இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் 7.73 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதையடுத்து, அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், எழுதுபொருட்கள், தேர்தல் தொடர்பான படிவங்கள், அழியாத மை போன்றவை பலத்த பாதுகாப்புடன் அனுப்பும் பணி ஏப்ரல் 22-ந் தேதி காலை 11 மணி முதல் தொடங்க இருக்கிறது. வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ந் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி
தமிழகத்தை பொருத்தவரை, 1977 ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலுமே இருமுனை போட்டியே இருந்து வந்தது. நீண்ட காலத்திற்கு பிறகு, இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாதக என நான்கு முனைப் போட்டி உருவாகியுள்ளது.
இதனால், வாக்காளர்களும் வேட்பாளர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் தயாராகி வருகின்றனர். குறிப்பாக, இளம் தலைமுறையினர் கொண்டாடும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் முதல் முறையாக போட்டியிடுவதால், எப்போதும் இல்லாத அளவுக்கு தேர்தலில் ஒரு விறுவிறுப்பு காணப்படுகிறது.
வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளும் பல்வேறு மாவட்டங்களில் கடைசி நேர சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகளின் படி, வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பே, அனைத்து வகையான பிரச்சாரங்களையும் முடித்து விட வேண்டும். அதன்படி, அரசியல் கட்சிகளின் தீவிர பிரச்சாரம் நாளை (ஏப்.21) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், பிரச்சாரம் முடிவடைந்த உடன் அமலுக்கு வரும் தேர்தல் விதிமுறைகளை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தேர்தல் தொடர்பான எந்தவொரு பொதுக் கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது. அதேபோல், எந்தவொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சாதனம் வாயிலாகப் பொது மக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது.
பொது மக்களை ஈர்க்கும் விதமாக, தேர்தல் சம்பந்தமான எந்தவொரு இசை நிகழ்ச்சி அல்லது திரையரங்கச் செயல்பாடு அல்லது பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்தவோ அல்லது ஏற்பாடு செய்யவோ செய்யக் கூடாது. இந்த விதிமுறை மற்றும் மேற்கண்ட 2 விதிமுறைகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், தொகுதி வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்களாக அல்லாதோர் ஏப். 21ந் தேதி மாலை 6 மணிக்கு மேல் அத்தொகுதியை விட்டு வெளியேறி விட வேண்டும். கல்யாண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்று சோதனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள் அனைத்தும் ஏப்.21-ந் தேதி மாலை 6 மணிக்கு பிறகு செயலற்றாதாக கருதப்படும். வாக்குப்பதிவு நாளன்று ஒவ்வொரு வேட்பாளருக்கும் அவரது சொந்த பயன்பாட்டிற்கான ஒரு வாகனம், தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்கான சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒரு வாகனம் மற்றும் தேர்தல் முகவர் அல்லது அவரது பணியாளர்கள் பயன்பாட்டிற்கான ஒரு வாகனம் என மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாகனங்களின் அனுமதி தேர்தல் நடத்தும் அதிகாரியால் வழங்கப்படும்.
வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச் சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனத்தை வாடகைக்கு எடுப்பதற்கு அல்லது வாங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொரு வேட்பாளரும் அனுமதிக்கக் கூடாது. மேலும், 2 நபர்களை மட்டுமே கொண்ட, வேட்பாளர்கள்/அரசியல் கட்சிகளின் தேர்தல் அலுவலகம் வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர்கள் தொலைவிற்கு வெளியே அமைத்துக் கொள்ளலாம். தேவையில்லாத கூட்டத்தை அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Read More
|
|
|